செய்திகள்

ராசிபுரத்தில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது

Published On 2017-01-07 11:33 GMT   |   Update On 2017-01-07 11:33 GMT
ராசிபுரத்தில் செல்போன் கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் பட்டணம் ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் வழக்கம்போல் கடைக்கு வந்தார்.

அப்போது பூட்டு உடைக்கப்பட்டு சட்டரை திறந்து கடையில் வைக்கப்பட்டிருந்த செல்போன்கள், மெம்மரி கார்டு, ரீ சார்ஜ் கூப்பன் உள்பட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டார்.

இது பற்றி அவர் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகிலுள்ள செட்டியன்புதூரைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகன் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 9-ம் வகுப்பு வரை படித்த வெங்கடேஷ் டிராக்டர் ஓட்டி வந்தார். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பரமத்தியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Similar News