திருப்பூரில் கொசு ஒழிப்பு பணிக்கு 500 பணியாளர்கள் நியமனம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் அசோகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆணையாளர் பேசும் போது கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு நாளை(இன்று) முதல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 440 பணியாளர்கள் மற்றும் வார்டுக்கு ஒருவர் வீதம் மாநகராட்சி பணியாளர்கள் 60 என்று மொத்தம் 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகள் தோறும் ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அவ்வாறு வரும் போது, கொசு மருந்து அடிக்கவும், குடிநீரில் அபேட் மருந்து தெளிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அழிக்க வேண்டும். வீடுகளில் குடிநீரை சேமித்து வைத்து அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ள சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்போருக்கு முதல் முறை எச்சரிக்கை நோட்டீசு வழங்க வேண்டும். தொடர்ந்து கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கமிஷனர் அசோகன் பேசினார்.