செய்திகள்

ஓய்வு பெற 3 நாளே உள்ள நிலையில் ஊராட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய செயலர்

Published On 2016-12-29 16:55 GMT   |   Update On 2016-12-29 16:55 GMT
ஒட்டன்சத்திரம் அருகே ஊராட்சி அலுவலகத்தில் செயலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டை ஊராட்சி அலுவலகத்தில் செயலராக பணிபுரிந்து வந்தவர் பன்னீர்செல்வம் (வயது58). நாளை மறுநாள் அவருடைய பணி நிறைவடைகிறது.

அன்று பிரிவு உபச்சார விழா நடத்தப்படுவதாக அலுவலக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி விட்டார்.

நேற்று 100 நாள் வேலை குறித்த கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான வேலைகளை செய்த பின்னர் அவர் காலையில் அலுவலகத்திலேயே கயிற்றில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். 10 மணி அளவில் வேலைக்கு வந்த ஊழியர்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் இடையகோட்டை போலீசார் அங்கு வந்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News