செய்திகள்

செஞ்சி அருகே வி‌ஷம் குடித்த தாய் பலி: 2 குழந்தைகள் உயிர் ஊசல்

Published On 2016-12-29 15:33 GMT   |   Update On 2016-12-29 15:33 GMT
செஞ்சி அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் வி‌ஷம் குடித்த தாய் பரிதாபமாக உயிரிந்தார். குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி:

செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை பகுதியை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி செல்வி (வயது 27). இவர்களுக்கு சுஜி (4), சுதா (2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று செல்வியுடன் மீண்டும் காண்டீபன் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்படுவதால் செல்வி மனமுடைந்து காணப்பட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வி‌ஷம் குடித்தார். பின்னர் தனது குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்தார். சிறிது நேரத்தில் செல்வி,அவரது மகள்கள் சுஜி, சுதா ஆகிய 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வி இன்று காலை பரிதாபமாக இறந்தார். சுஜி மற்றும் சுதா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News