காதலிக்க கூறி வாலிபர் மிரட்டியதால் ஆசிட்டை குடித்த கல்லூரி மாணவி
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் வேளார் தெருவை சேர்ந்தவர் முருகேசன்,மீன் வியாபாரி. இவரது மனைவி ரூபி. இவர்களது மகள் நகோமி (வயது17), அங்குள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
கடந்த 24-ந்தேதி இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனைக்காக அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார். பின்னர் நள்ளிரவு வீடு திரும்பும் போது, அந்த பகுதியை சேர்ந்த தனியார் மில் ஊழியர் ராஜா (20) என்பவர் நகோமியிடம் காதலிப்பதாக கூறியதோடு, கையை பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊற்றி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நகோமி வீட்டிற்கு வந்து ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை கைதுசெய்தனர்.