புழல் ஜெயிலில் கைதிகள் உண்ணாவிரம் வாபஸ்
செங்குன்றம்:
அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்ருதீன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கைதிகள் கம்ருதீன் உள்பட 10 பேரும் கடந்த 23-ந் தேதி முதல் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தங்களை சாதாரண அறைக்கு மாற்ற வேண்டும், உறவினர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று இரவு முதல் கைதிகள் 10 பேரும் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் கைதிகளின் 4 நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.