மோட்டார் சைக்கிளில் சென்ற போது வேன் மோதி என்ஜினீயர் பலி
ராயபுரம்:
தண்டையார்பேட்டை நேதாஜிநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவர் மீது வேன் ஏறி இறங்கியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த டில்லிபாபுவை கைது செய்தனர்.