செய்திகள்

பேரணாம்பட்டு அருகே காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

Published On 2016-12-19 11:39 GMT   |   Update On 2016-12-19 11:39 GMT
பேரணாம்பட்டு அருகே வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த இளம்பெண் காதலனுடன் சேர்ந்து திருமணம் செய்து கொண்டார். இருவரையும் மேல்பட்டி போலீசார் குடியாத்தம் சப்-மாஜிஸ்ட்டிரேட் முன்பாக நேற்றிரவு ஆஜர்படுத்தினர்.

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி லட்சுமியம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் என்பவர் மகள் தனலட்சுமி (வயது 19). இவர் பேரணாம்பட்டு அடுத்த துத்திப்பட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 15-ந் தேதியன்று வேலை செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பவில்லை.

தனலட்சுமியை காணாததலால் அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த மான்ஸ் என்பவர் மகன் திலக் (21) என்பவர் திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

திலக் என்பவர் தனது மகள் தனலட்சுமியை ஏமாற்றி கடத்தி சென்றதாக மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் பிரகாசம் புகார் கொடுத்தார்.

பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மேல்பட்டி போலீசார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். நேற்று காலை மேல்பட்டி கிராமத்திலுள்ள திலக் வீட்டிற்கு திலக்கும், தனலட்சுமியும் திருமணமாகி வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீசார் திலக், தனலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் காதலித்து வந்ததாகவும் கடந்த 15-ந் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி பெங்களூர் சென்று அங்குள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு மேல்பட்டி கிராமத்திற்கு திரும்பி வந்ததாகவும் தெரிவித்தனர்.

இருவரையும் மேல்பட்டி போலீசார் குடியாத்தம் சப்-மாஜிஸ்ட்டிரேட் முன்பாக நேற்றிரவு ஆஜர்படுத்தினர்.

Similar News