செய்திகள்

காரிமங்கலம் அருகே மைக்செட் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2016-12-07 11:07 GMT   |   Update On 2016-12-07 11:07 GMT
காரிமங்கலம் அருகே மைக்செட் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஅள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 36), விவசாயி. இவர் நேற்று காலை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கும்பாரஅள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி கூட்டத்திற்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஒலிப்பெருக்கியை கட்டிக் கொண்டிருந்தார்.

பின்னர் ஒலிப்பெருக்கியில் இணைக்கப்பட்டிருந்த மின்வயரை அருகில் சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பி மீது தூக்கி வீசினார். இதில் சின்னசாமி வீசிய வயர் உயர்மின் அழுத்த கம்பியில் பட்டு வயர் உருகி சின்னசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்விபத்தில் இறந்த சின்னசாமிக்கு விஜயா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ (12) இந்துமதி (9) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News