செய்திகள்

கண்ணீர் விட்டு அழுத ஓ.பி.எஸ்.- சசிகலா: ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

Published On 2016-12-06 08:55 GMT   |   Update On 2016-12-06 16:18 GMT
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் விட்டு அழுத ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இன்று பிற்பகல் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெயலலிதா உடலுக்கு அருகில் சோகத்துடன் நின்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மோடி ஆறுதல் கூறி தேற்றினார்.

இதே போல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் மறைவு நாட்டை துக்கமடையச் செய்திருப்பதாக கூறிய சிவராஜ் சிங் சவுகான், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்.

ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, தமிழகத்திற்கு தேவையான உதவியை செய்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பதாக தெரிவித்தார். மதுரை ஆதீனமும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பல்வேறு தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Similar News