செய்திகள்

வேப்பனஅள்ளியில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் திடீர் மோதல்: 4 பேர் காயம்

Published On 2016-12-04 10:26 GMT   |   Update On 2016-12-04 10:26 GMT
வேப்பனஅள்ளியில் பணத்தகராறு காரணமாக அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. பிரமுகர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் சம்பவத்தில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளியில் உள்ள கதிலிபள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 49).

இவர் அ.தி.மு.க. பிரமுகர். இவர் வேப்பனஅள்ளியில் உள்ள தீர்த்தம் சாலையில் மெடிக்கல் கடை வைத்துள்ளார்.

இவருக்கும் வேப்பனஅள்ளி பகுதியை சேர்ந்த தி.மு.க.பிரமுகர் ரகுநாதன்(42) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில், இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கியது தொடர்பாக கொடுத்த பணத்தை தரும்படி ராமமூர்த்தியுடம் கேட்டதாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ரகுநாதனின் ஆதரவாளர்களும், ராமமூர்த்தியின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இதனைக் கண்டதும் அக்கம் பக்கத்தினர் அவர்களுடைய சண்டையை தடுத்து விலக்கி விட்டனர். இந்த மோதல் சம்பவத்தில் காயம் அடைந்த ராமமூர்த்தி, ரகுநாதன், பவன்குமார்(27) உள்பட 4 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து வேப்பனஅள்ளி போலீஸ் நிலையத்தில் இருவரும் தனித்தனியாக புகார் செய்தார்கள். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, ரகுநாதன் ஆதரவாளரான பவன்குமாரை கைது செய்தார்.

Similar News