காடுவெட்டி குரு மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை: ஐகோர்ட்டு
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்டம், பணம்காட்டுகுப்பத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு 28ந் தேதி வன்னியர் சங்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குரு கலந்துக் கொண்டு பேசினார். அதில், வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பேசினார்.
அப்போது அவர் இருபிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக மாநில உளவுப் பிரிவு போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு 1-வது குற்றவியல் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி காடுவெட்டி குருவுக்கு குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு ரத்து செய்யவேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் காடு வெட்டி குரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசியல் காரணத்துக்காக ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் நிர்பந்தத்தின் அடிப்படையில் போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில், தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதிவாகியுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.டி. செல்வம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து காடுவெட்டி குரு மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தும், இந்த வழக்கு விசாரணையை அவர் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.