துடியலூர் அருகே டிராக்டர் மீது பஸ் மோதல்: சாலை பணியாளர் பலி
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு முருகன் நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு சரிபார்க்கும் பணி நேற்று இரவு நடந்து கொண்டு இருந்தது.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் முருகன் நகர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோடு சரிபார்க்கும் பணிக்காக ஜல்லி கல்லுடன் நின்ற டிராக்டர் மீது மோதியது.
டிராக்டர் மீது பஸ் மோதிய வேகத்தில் அங்கு ரோடு சரிபார்க்கும் பணி செய்து கொண்டு இருந்த சிறுமுகை அருகே உள்ள கஞ்ச நாயக்கன் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 55) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அரசு பஸ் அருகே கிடந்த ஒரு கடை முன்பிருந்த சுவரை இடித்து கொண்டு நின்றது.
விபத்தில் படுகாயம் அடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியசாமியும் (43). படுகாயம் அடைந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.