செய்திகள்

கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் - 4 பேர் கைது

Published On 2016-11-04 10:24 GMT   |   Update On 2016-11-04 10:24 GMT
கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் நடத்திய கும்பம் சிக்கியது.
கோவை:

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 38). நகை தொழிலாளி. இவர் காந்திபுரம் 100 அடி ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் முத்துகுமாரிடம் ‘எங்களிடம் அழகிகள் உள்ளனர். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் அவர்கள் ஆயில் மசாஜ் செய்து விடுவார்கள். ரூ.5 ஆயிரம் கொடுத்தால் அவர்களோடு உல்லாசமாக இருக்கலாம்’ என ஆசை காட்டி அழைத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துகுமார் அவர்களிடம் நைசாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் அவர் இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விபசார கும்பலை ரகசியமாக கண்காணித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் மேலக்கல் காந்தர்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழரசன் (27), இவரது மனைவி பிரியா (27), கோவை ரத்தினபுரியை சேர்ந்த சுரேஷ்குமார்(34), சிங்காநல்லூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி மணிமேகலை என்ற வேலுமணி(40) என்பது தெரிய வந்தது.

இவர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மாடி கட்டிடத்தில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தப் போவதாக கூறி 3 அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு கோவை சிவானந்த காலனியை சேர்ந்த 2 அழகிகளை வைத்து, மசாஜ் சென்டருக்கு வந்த வாடிக்கையாளர்களை உல்லாசத்துக்கு அழைத்து விபசாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து தமிழரசன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.45,200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களது பிடியில் இருந்த 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

Similar News