செய்திகள்

ஆசிரியையை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை

Published On 2016-11-03 17:30 GMT   |   Update On 2016-11-03 17:30 GMT
ஆசிரியையை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவையாறு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருவையாறு:

தஞ்சையை அடுத்த ஒன்பத்துவேலி காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகள் பத்மாவதி(வயது32). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும், நடுப்படுகை வடக்கு வாய்கால் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் சுப்பிரமணியனும்(35) காதலித்து வந்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பத்மாவதியுடன் சுப்பிரமணியன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் பத்மாவதி கர்ப்பம் ஆனார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுப்பிரமணியனிடம் பத்மாவதி கூறினார். ஆனால் திருமணம் செய்ய அவர் மறுத்ததுடன், உன் கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறினார். மேலும் அவர் பத்மாவதியின் குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் பத்மாவதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்து திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டதில் சுப்பிரமணியன் தான் அந்த குழந்தைக்கு தந்தை என்பது தெரியவந்தது. இந்த வழக்கை நீதிபதி சோமசுந்தரம் விசாரணை செய்து சுப்பிரமணியனுக்கு 417-வது பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனையும், 493-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், 506 (2)-வது பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்ததுடன், புகார்தாரருக்கு இழப்பீடு தொகை ரூ. 50 ஆயிரத்தை 2 மாதத்தில் கொடுத்து விட வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இந்த சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Similar News