செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம்

Published On 2016-11-02 10:33 GMT   |   Update On 2016-11-02 10:33 GMT
நாட்டறம்பள்ளி அருகே மீண்டும் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் எம்.ஜி.ஆர். நகரை ஓட்டியுள்ள மலைப் பகுதியில் கடந்த 10 நாட்களாக 2 சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தது.

இதையடுத்து திருப்பத்தூர் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசு வெடித்து, தீப்பந்தம் ஏற்றினர்.

இதையடுத்து 2 சிறுத்தைகளும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒப்பதவாடி காட்டுப் பகுதிக்கு சென்று விட்டதாக திருப்பத்தூர் வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில் வெலக்கல் நத்தம், செட்டேரி அணையை ஒட்டியுள்ள பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். ஆடு மேய்ப்பவர்கள் சிலர் அந்த சிறுத்தைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சிறுத்தைகளை ஊருக்குள் புகாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News