குரும்பூர் அருகே தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
குரும்பூர்:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அருளானந்தபுரத்தை சேர்ந்தவர் பாதகரை முத்து(வயது 29). இவர் ஆழ்வார்திருநகரி தி.மு.க. ஒன்றிய தொண்டரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பாதகரைமுத்து அதே பகுதியில் உள்ள தனது வாழைத்தோட்டத்திற்கு காரில் சென்றார். பின்னர் அவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு வாழைத்தோட்டத்தில் நடைபெறும் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காராவிளையை சேர்ந்த ராமச்சந்திரன் (26) என்பவர் பாதகரைமுத்துவிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாதகரைமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவரது காரின் கண்ணாடிகளை அரிவாளால் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமச்சந்திரனை இன்று கைது செய்தார்.