செய்திகள்
கொருக்குப்பேட்டையில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
கொருக்குப்பேட்டையில் வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
கொருக்குப்பேட்டை ஆரணிகங்கன் தெருவை சேர்ந்தவர் புதியவன். வீட்டின் முதல் மாடியில் வசித்து வரும் இவர் கீழ்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுந்தரவடிவு.
நேற்று காலை கணவன் - மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கடையில் இருந்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் சுந்தரவடிவு வீட்டுக்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் வீட்டுக்குள் புகுந்து துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதில் ஈடுபட்டது கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.