செய்திகள்

கருணாநிதி நலம் அடைய பொன்.ராதாகிருஷ்ணன் - டாக்டர் தமிழிசை வாழ்த்து

Published On 2016-10-26 05:15 GMT   |   Update On 2016-10-26 07:46 GMT
கருணாநிதி விரைவில் உடல் நலமடைய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் சென்னை கோபாலபுர இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

அவரது உடலில் சில இடங்களில் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை அளித்தனர்.

தற்போது உடலில் கொப்பளங்கள் குறைந்துள்ள நிலையில் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். எனவே அவரை பார்வையாளர்கள் சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் கருணாநிதி விரைவில் உடல் நலமடைய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர், நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர் கலைஞர். அவர் ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. விரைந்து உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

தமிழிசை சவுந்தர்ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மூத்த தலைவர் மரியாதைக்குரிய கலைஞர் ஒவ்வாமை பிரச்சனையால் உடல் நலம் பாதிப்படைந்தார் என்று கேள்விப்பட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர் பூரண குணமடைந்து இயக்க பணியையும், அரசியல் பணியையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News