திண்டுக்கல் அருகே கிறிஸ்தவ ஆலயத்துக்குள் அரிவாளுடன் புகுந்த வாலிபர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகில் உள்ள பஞ்சம்பட்டியில் திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்டப்ட இந்த சர்ச் திண்டுக்கல் மறை மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமானது. தினந்தோறும் காலையில் இங்கு திருப்பலி நடப்பது வழக்கம்.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இன்று காலை 6 மணியளவில் திருப்பலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் அரிவாளுடன் உள்ளே புகுந்து பங்குத் தந்தை திருப்பலி செய்யும் இடத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினார்.
மேலும் மின் விசிறி, டியூப் லைட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தி சத்தம் போட்டதால் ஆலயத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சபை ஊழியர்கள் வட்டார அதிபர் சேசுராஜிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து தர்மராஜ் என்பவர் தெரிவிக்கையில் இந்த ஆலயத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உதவி பங்குத் தந்தையாக இருந்தவர் 9-ம் வகுப்பு மாணவி மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அவர் ஆலய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அந்த மாணவியின் பெற்றோரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது.
தற்போது இன்று ஆலயத்தில் அரிவாளுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்டது அந்த மாணவியின் சித்தப்பா ராபர்ட் பிரபு என்பவர்தான். அவரது செயல் குறித்து காவல் துறையிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ராபர்ட் பிரபு மீது சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.