கூடலூர் அருகே காய்கறி லாரியில் பட்டாசு கடத்தல்: திண்டுக்கல் டிரைவர் கைது
கூடலூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பட்டாசுகள் வாங்கி செல்லப்படுகிறது.
உரிமம் பெறாமல் பட்டாசுகள் வாங்கி செல்வதை தடுக்கவும், பேருந்துகள் மற்றும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகள் ஏற்றி செல்வதை கண்காணிக்கவும் போலீசார் சோதனைச்சாவடிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து தினசரி கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் ஏற்றி செல்லப்படுகிறது. ஒட்டன்சத்திரத்தைசேர்ந்த வியாபாரி சண்முகம் கோட்டயத்திற்கு காய்கறிகளை ஒரு லாரியில் ஏற்றி விட்டார். அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் ஓட்டிவந்தார். காய்கறிகளுக்கு இடையில் உரிமம் பெறாத பட்டாசுகளை மறைத்து வைத்து கேரளாவிற்கு முத்துச்சாமி ஓட்டி வந்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளை கடந்து குமுளி சோதனைச் சாவடிக்கு வந்தபோது போலீசார் அதனை கண்டு பிடித்தனர்.
லாரியில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியையும் கைப்பற்றி டிரைவர் முத்துச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.