செய்திகள்

புதுவை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-10-19 11:24 GMT   |   Update On 2016-10-19 11:24 GMT
புதுவையில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் ரூபச்சந்திரன். மீனவர். இவரது மகள் சுலோமியா (வயது 19). புதுவை அருகே பொம்மையார் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார்.

இவருக்கும் புதுவை குருசுகுப்பத்தை சேர்ந்த உறவினரான அறிவழகன் (வயது21) இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்தனர். சுலோமியாவுக்கு குடும்பத்தினர் திடீரென திருமண ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து சுலோமியா வீட்டை விட்டு வெளியேறி காதலனை தேடி புதுவைக்கு வந்தார். பின்னர் இருவரும் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சிவன்கோவிலில் கடந்த 14-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சுலோமியாவின் குடும்பத்தினர் காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து பயந்து போன காதல்ஜோடி புதுவை வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Similar News