செய்திகள்

மதுரையில் ஒரே நாளில் 6 பெண்களிடம் 32 பவுன் நகை பறிப்பு - மர்ம வாலிபர்கள் கைவரிசை

Published On 2016-10-11 15:52 GMT   |   Update On 2016-10-11 15:52 GMT
மதுரையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 6 பெண்களிடம் 32 பவுன் நகை பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை தெப்பக்குளம் கணபதி நகரை சேர்ந்தவர் கமலா (வயது64). இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் கமலா அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

மதுரை துரைச்சாமி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி கல்யாணி (61). இவர் சாமி கும்பிட கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பினார்கள்.

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சாது சுந்தர்சிங். இவரது மனைவி சாந்தி (45). இவர் மதுரை வசந்த நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சாந்தியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென்று வழிமறித்து 2½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதேபோல திருப்பாலையை சேர்ந்த சரண்யாவிடம் 7 பவுன் நகையும், யாகப்பா நகரை சேர்ந்த சரோஜாவிடம் 2 பவுன் நகையும், அருள்நகரை சேர்ந்த உமாராணி (62) என்பவரிடம் 7 பவுன் நகையையும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை காட்டி திருடி சென்றுவிட்டனர்.

ஒரே நாளில் நடந்த இந்த 6 சம்பவங்கள் குறித்து தெப்பக்குளம், தல்லா குளம், அண்ணாநகர், எஸ்.எஸ்.காலனி மற்றும் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகை பறித்த மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த சேகர் மகள் கலைமதி (23). இவர் மேலவெளி வீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் துணி வாங்க வந்திருந்தார். துணி வாங்கிவிட்டு வெளியே வந்தபோது ஒரு மர்மநபர் கலைமதி வைத்திருந்த ரூ15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடுங்கி கொண்டு ஓடிவிட்டான்.

இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News