செய்திகள்

பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அலுவலர்களுக்கு நீலகிரி கலெக்டர் அறிவுரை

Published On 2016-10-11 12:31 GMT   |   Update On 2016-10-11 12:31 GMT
நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கினார்.
ஊட்டி:

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் தொடங்கியது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கினார்.

அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் 1077-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.

ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261295, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னுர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

பெறப்பட்ட தகவல் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு டிசம்பர் வரை 24 மணி நேரமும் செயல்படும் என கலெக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Similar News