செய்திகள்

பல்லடம் அருகே வாடிப்பட்டி வாலிபரை வெட்டி கொன்ற மனைவி

Published On 2016-10-05 10:22 GMT   |   Update On 2016-10-05 16:12 GMT
பல்லடம் அருகே வாடிப்பட்டி வாலிபரை வெட்டி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 28). இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு கபிலேஷ் (5) என்ற மகனும், ஜோஷ்னா (1½) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சிவராமன், பல்லடம் அருகே காரணம் பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் மனைவி- குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சிவராமனுக்கும், சுகன்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதேபோல் நேற்று இரவும் வழக்கம்போல் கணவன்- மனைவி இடை யே தகராறு ஏற்பட்டது.

அப்போது சிவராமன், ஆவேசத்தில் மனைவி சுகன்யாவை பிடித்து கீழே தள்ளினார். இதில் நிலைகுலைந்த அவர் விழுந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுகன்யா , கணவர் என்றும் பாராமல் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து சிவராமனை வெட்டினார். இதில் தலை, முதுகு, ஆகிய இடங்களில் அவருக்கு பலத்த வெட்டு விழுந்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவராமன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணவரை கொலை செய்த சுகன்யாவை போலீசார் கைது செய்தனர்.

Similar News