செய்திகள்

இரணியல் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி

Published On 2016-10-04 11:02 GMT   |   Update On 2016-10-04 11:02 GMT
இரணியல் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் அரசு பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:–

இரணியல் அருகே பரசேரி முளச்சன்விளையை சேர்ந்தவர் செல்லையா (வயது 77), விவசாயி. இவர் தனது வீட்டில் இருந்து பரசேரி செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் எதிர்பாராத விதமாக செல்லையா மீது மோதியது.

இதில், அவரது தலை, கை உள்பட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய செல்லையாவை அக்கம் பக்கம் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முதியவர் செல்லையா ஏற்கனவே இறந்ததாக கூறினர். இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News