செய்திகள்

பனப்பாக்கத்தில் 2 குழந்தைகளின் தாய் கடத்தல்: 2 பேர் கைது

Published On 2016-10-03 14:50 GMT   |   Update On 2016-10-03 14:50 GMT
பனப்பாக்கத்தில் 2 குழந்தைகளின் தாயை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

நெமிலி:

பனப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது39). இவரது மனைவி கோகிலா (வயது29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மதியம் வீட்டில் இருந்தவரை காணவில்லை என்று மூர்த்தி நெமிலி போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட நெமிலி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை செய்தார். பனப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (வயது27). அருக்கு உதவியாக நேதாஜி இருவரும் சேர்ந்து கடத்தி சென்றதாக சந்தேகப்படுவதாக மூர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதன்படி விசாரித்து தேடுதலின்போது சுரேசின் நண்பன் நேதாஜி பனப்பாக்கம் பஸ் நிலையத்தில் பிடிபட்டார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்த போது சுரேஷ் கோகிலாவை கடத்தியதும் அதற்கு நேதாஜி உதவியதும் தெரியவந்தது.

இதில் சுரேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்றும் தெரியவந்தது. சுரேஷ் கோகிலாவை வாலாஜா பகுதியில் உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளதும் தெரிந்து கொண்ட போலீசார் உடனடியாக கோகிலாவை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ், நேதாஜி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News