செய்திகள்

ஒரே மாதத்தில் டிஸ்பிளே பழுது: செல்போன் கடைகாரருக்கு கோர்ட்டு அபராதம்

Published On 2016-10-01 16:54 GMT   |   Update On 2016-10-01 16:54 GMT
ஒரே மாதத்தில் டிஸ்பிளே பழுது ஆனதால் செல்போன் கடைகாரருக்கு கோர்ட்டு அபராதம் விதித்துள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார். திண்டுக்கல்லில் உள்ள அலைபேசி கடையில் கடந்த ஆண்டு ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் ஐ போன் மாடல் 6-ஐ வாங்கினார். கேரண்டியாக போனில் எதும் பழுது ஏற்பட்டால் சர்வீஸ் உண்டு என கடைக்காரர் கூறியுள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலைபேசிக்கு ரூ.2500 இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

இந்நிலையில் போன் வாங்கிய ஒரே மாதத்தில்அலைபேசியின் திரை (டிஸ்பிளே) பழுதானது. அதனை சர்வீஸ் செய்து தருமாறு போன் வாங்கிய கடையில் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடைக்காரர் ரூ.24 ஆயிரம் செலவாகும் எனக் கூறியுள்ளார். இதனால் செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி அய்யப்பன், அலைபேசி கடையும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து அதே நிறுவன டிஸ்பிளே வாங்கி அலை பேசியில் பொருத்தி கொடுக்க வேண்டும். மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் மாதம் 9 சதவீதம் வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். உறுப்பினர்கள் மீனாம்பிகை, ஷேக் அப்துல் காதர் உடன் இருந்தனர்.

Similar News