செய்திகள்

கூடலூர் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

Published On 2016-09-30 17:09 GMT   |   Update On 2016-09-30 17:09 GMT
கூடலூர் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பெருமாள்கோவில்புரம், காஞ்சிமரத்துரை, சரித்திரவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பீட்ரூட் விளைவிப்பதிலேயே விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களில் பீட்ரூட் விளைச்சல் கிடைத்துவிடும் என்பது தான் இதற்கு காரணம்.

இந்த நிலையில் தற்போது கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பீட்ரூட் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த மாதம் கிடைத்த விலை கூட தற்போது கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விலை அதிகரிக்க வாய்ப்பு

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் பள்ளிகள் செயல்பட்டு வந்தாலும், முகூர்த்த நாட்கள் என்பதாலும் ஒரு கிலோ பீட்ரூட்டிற்கு ரூ.10 முதல் ரூ.18 வரை விலை கிடைத்தது. தற்போது முகூர்த்த நாட்களும் இல்லை. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் தற்போது ஒரு கிலோ பீட்ரூட்டிற்கு ரூ.6 முதல் ரூ.8 வரையே விலை கிடைக்கிறது.

இது எங்களை கவலையடைய செய்தாலும் சபரிமலை சீசன் காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் தொடர்ந்து பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர்.

Similar News