செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி அண்ணன்–தங்கை பலி

Published On 2016-09-29 17:21 GMT   |   Update On 2016-09-29 17:21 GMT
ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி அண்ணன்–தங்கை பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி அண்ணன்–தங்கை பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அவருடைய மனைவி கன்னிமார். இவர்களுடைய மகன் கோபிநாத் (வயது 13), மகள் கோபிகா (12). இருவரும் கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

கணவன்–மனைவி இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோபிநாத்தும், கோபிகாவும் படிக்கும் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து 2 பேரும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் அவர்களுடைய பாட்டியான காளியம்மாள் என்பவரின் வீட்டிற்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை காளியம்மாள் அதே பகுதியில் செயல்படாமல் இருக்கும் கல்குவாரியில் உள்ள குட்டையில் துணிகளை துவைப்பதற்காக சென்றார். அவருடன் கோபிநாத்தும், கோபிகாவும் சென்றனர். குட்டை அருகே உள்ள பாறையில் அமர்ந்து காளியம்மாள் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார்.

சிறுவர்கள் 2 பேரும் அவர் அருகிலேயே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கோபிகா எதிர்பாராதவிதமாக குட்டைத் தண்ணீரில் தவறி விழுந்தாள். இதைப்பார்த்த கோபிநாத்தும் தங்கையை காப்பாற்றுவதற்காக குட்டையில் குதித்தான். இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதனை கண்ட காளியம்மாள் அலறி கூச்சல் போட்டார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குட்டைக்குள் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் நீரில் முழ்கி அண்ணன்–தங்கை இருவரும் பலியானார்கள். பின்னர் இதுகுறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் குட்டைக்குள் இறங்கி பலியான அண்ணன்–தங்கையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அண்ணன்–தங்கை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News