விபத்தில் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலி: தப்பியோடிய லாரி டிரைவர் கைது
சேதராப்பட்டு:
புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்ககுமரன், அரவிந்த், ஹரிபிரசாத், பாலகிருஷ்ணன்.
இவர்கள் 4 பேரும் நேற்று அதிகாலையில் புதுவையில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி அந்த கார் மீது மோதியது.
இதில், காரில் பயணம் செய்த தங்ககுமரன், அரவிந்த், ஹரிபிரசாத் ஆகியோர் பலியானார்கள். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடி விட்ட சம்பந்தப்பட்ட லாரி டிரைவரை வலைவீசி தேடி வந்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த லாரி டிரைவர் போலீசாரிடம் சிக்கினார். அவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மேலபனையூரை சேர்ந்த ரமேஷ் (வயது 32) ஆவார். ரமேசை இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் கைது செய்தார். ரமேஷ் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.