செய்திகள்

திருத்துறைப்பூண்டி பாரதிய ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல்

Published On 2016-09-28 11:35 GMT   |   Update On 2016-09-28 11:35 GMT
திருத்துறைப்பூண்டி பாரதிய ஜனதா பிரமுகரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சி புதுத்தெருவை சேர்ந்தவர் பி.ஆர். கணேசன். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு 8 மணியளவில் பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் கடைத்தெருவிற்கு சென்றார். உள்ளாட்சி மாரியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கணேசனை வழிமறித்தனர்.

அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர்கள் கணேசனிடம் விநாயகர் சிலை ஊர்வலம் நீதானே நடத்தினாய். நீ ஒவ்வொரு முறையும் தப்பித்து விடுகிறார். அடுத்த குறி நீ தான் என கொலை மிரட்டில் விடுத்தனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் திருத்துறைப்பூண்டி போலீசில் நள்ளிரவு 11 மணியளவில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் டி.எஸ்.பி. கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கணேசன் கடந்த ஆண்டு கட்டிமேடு தேவர் பண்ணை என்ற இடத்தில் அவரது உறவினர் வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தினர்.

அப்போது அவர் மீது படாமல் மோட்டார் சைக்கிள் சீட் மீது பட்டது. இதனால் அவர் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து கத்தியுடன் சென்று அவர் போலீசில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன் அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர்.

இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் எரிந்து தேசம் அடைந்தது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்து முன்னணி தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கணேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News