செய்திகள்
ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு
திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி உத்தமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டியும் நீடுழி வாழ வேண்டியும் உத்தமர் கோவிலில் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ராமு தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருள்மிகு பிரம்மா, ஸ்ரீதேவி, சிவன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பதியில் இருந்து தமிழகத்தில் உள்ள 108 வைணவ தலங்களுக்கு ரத யாத்திரை வந்துள்ளது. அந்த ரதம் நேற்று உத்தமர் கோவிலுக்கு வருகை தந்தது. அதிலும் அம்மா பெயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் பால்வளத்தலைவர் ராஜேந்திரன், பேரவை ஒன்றிய செயலாளர் ஆதாளி, ஒன்றிய சேர்மன் வெற்றிச் செல்வி தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், 2வது வார்டு கவுன்சிலர் மோகன், ஆனந்தன், காண்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.