செய்திகள்

பொய்த்துப் போன பருவமழை: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தண்ணீரின்றி கருகும் நெற் பயிர்

Published On 2016-09-26 11:37 GMT   |   Update On 2016-09-26 11:37 GMT
பருவமழை பொய்த்துப் போனதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தண்ணீரின்றி நெற் பயிர்கள் கருகி வருகிறது.
கம்பம்:

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உத்தமபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் காலதாமதமாக முதல் போக நெற்பயிர் விவசாயம் தொடங்கியது. சுமார் 3000 ஏக்கருக்கு மேல் நடவு பணி நிறைவுப்பெற்று களை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதனிடையே இப்பகுதிக்கு முக்கிய பாசன நீராதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்துவிட்டது. அணையில் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பாசனக் கால்வாய்களில் தண்ணீர் செல்லாததால் இப்பகுதிகளில் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்ட நிலையில் வட கிழக்கு பருவ மழையை நம்பியே 4,707 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயப் பணிகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் திருப்தியாக இல்லாததாலும் எதிர்பார்த்த பருவ மழை பெய்யாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது மழைக் காலங்களில் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முயற்சி எடுக்க வேண்டும். தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Similar News