எடப்பாடி அருகே சீரான குடிநீர் வழங்க வேண்டி பொது மக்கள் சாலை மறியல்
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து உள்ள வெள்ளரி வெள்ளி ஊராட்சிக்குட்பட்ட கண்ணாங்காடு, கல்லபாளையம் காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த பல நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அந்தப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூலாம்பட்டி போலீசார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அசோக், கூட்டுறவு சங்க தலைவர் சத்தியபானு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் பிரச்சினை சீர் செய்யப்படும் என்று உறுதி கூறினர். இதை தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் திடீரென நடைபெற்ற சாலை மறியலால் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.