செய்திகள்

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சலில் இருந்து குணம் அடைந்தார்: விரைவில் வீடு திரும்புகிறார்

Published On 2016-09-23 08:21 GMT   |   Update On 2016-09-24 09:15 GMT
நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா காய்ச்சலில் இருந்து குணம் அடைந்து வழக்கமான உணவு சாப்பிடுகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு 11.30 மணி அளவில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல் அடித்தது.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு நீர்ச்சத்து இழப்பும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் உடல் நலம் சீரானது.

இன்று காலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் குணம் அடைந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று பகல் 12 மணிக்கு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு காய்ச்சல் மற்றும் நீரிழப்பு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை. வழக்கமான உணவு சாப்பிடுகிறார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து உடல் நிலையை கண்காணித்து வருகிறோம்“

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிகிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரண்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் என்ற தகவல் கேட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.

ஜெயலலிதா குணம் அடைய வேண்டி அ.தி.மு.க.வினர் இன்று கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

Similar News