செய்திகள்
ராம்குமார் உடலை பார்க்க வந்த அவரது உறவினர் செல்வத்தை படத்தில் காணலாம்.

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2016-09-19 02:58 GMT   |   Update On 2016-09-19 02:58 GMT
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை:

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் ராம்குமார் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்குமார் உறவினர் என்று கூறிக்கொண்டு, செல்வம் என்ற நபர் பிணவறைக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் முறையிட்டபடியே சென்றார். இந்த நிலையில் ராம்குமாரின் உறவினர்கள் பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே மறியல் கைவிடப்பட்டது.

Similar News