செய்திகள்

ராணிப்பேட்டையில் லாரி- பைக் மோதல்: உக்ரைன் மருத்துவ மாணவர் பலி

Published On 2016-09-17 13:37 GMT   |   Update On 2016-09-17 13:37 GMT
ராணிப்பேட்டையில் இன்று காலை பைக் மீது லாரி மோதிய விபத்தில் உக்ரைன் மருத்துவ மாணவர் பலியானார்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் வாலாஜா சுவர்ண செட்டி தெருவை சேர்ந்தவர் காஜா ஷெரீப். அரிசி வியாபாரி. இவரது மகன் ஹாசீன் ஷெரீப் (வயது 21). இவர், ரஷ்யா அடுத்த உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

ஹாசீன் ஷெரீப் சமீபத்தில் விடுமுறையில் வாலாஜாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவர், ராணிப்பேட்டையில் உள்ள தனது அத்தை மகன் சம்சுதீனை (வயது 23) பார்க்க பைக்கில் சென்றார்.

சம்சுதீனை பார்த்த பிறகு, அவருடன் ஹாசீன் ஷெரீப் ஆற்காட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். ஜெயராம் பேட்டை என்ற இடத்தில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹாசீன் ஷெரீப் மற்றும் சம்சுதீன் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக 2 பேரும் மீட்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஹாசீன் ஷெரீப் இன்று காலை பரிதாபமாக இறந்தார். சம்சுதீனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News