செய்திகள்

சாயல்குடி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது பள்ளி வாகனம் மோதி வாலிபர் சாவு

Published On 2016-09-07 09:31 GMT   |   Update On 2016-09-07 09:32 GMT
சாயல்குடி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது பள்ளி வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாயல்குடி:

சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் கிராமத்தை சேர்ந்தவர் பீர்மைதீன். இவரது மகன் கரீம் (வயது 42). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர், தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் நேற்று காலை ஊர் திரும்பினார்.

மாலையில், மோட்டார் சைக்கிளில் சாயல்குடி சென்ற அவர், இரவு 7 மணி அளவில் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார். ஒப்பிலான் வரும் வழியில் பெரியகுளம் விலக்கு ரோடு அருகே கரீம் வந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கரீம், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று கரீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக கரீமின் உறவினர் சபையர்அலி கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் மேலச்செல்வனூர் சசிகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News