வேலூர் காகிதபட்டறையில் உறியடி, சறுக்கு மரம் ஏறும் திருவிழா
வேலூர்:
வேலூர் காகிதபட்டறை, ஆற்காடு ரோட்டில் வரதராஜ பெருமாள் பஜனை கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு திருமஞ்சன சேவையும், மாலை 4 மணிக்கு பல வண்ண புஷ்ப அலங்காரத்தில் கண்ணபிரான் கருட வாகனத்தில் வீதிஉலாவும் நடந்தது. வீதி உலாவின் போது இளைஞர்கள் சிலம்பாட்டம் ஆடினர். பின்னர் சாமி திரவுபதி அம்மன் கோவிலை வந்தடைந்தது.
இதையடுத்து உறியடி நிகழ்ச்சியும், சறுக்கு மரம் ஏறும் போட்டியும் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு வாலிபர் சறுக்கு மரத்தில் ஏறி அதன் உச்சியில் வைத்திருந்த பரிசு பொருளை எடுத்தார். அதைத்தொடர்ந்து மின்விளக்கு அலங்காரத்துடன் சாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை யாதவ இளைஞர் அணியினர் செய்திருந்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல குழு தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம், கவுன்சிலர் தாமோதரன், நாட்டாண்மை மாணிக்கம் கமல், வாசு, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.