உடுமலையில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
உடுமலை:
உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி நாகரத்தினம் (வயது 52).
இவர் இன்று காலை அப்பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் திடீரென நாகரத்தினம் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்தான். இதனால் நாகரத்தினம்,‘திருடன்.. திருடன்’’ என்று கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறி போன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் என கூறப்படுகிறது.
இது பற்றி நாகரத்தினம் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடுமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.