செய்திகள்

சுவாதியை போல் ஒருதலைக் காதல்: இளம்பெண்ணை கத்தியால் குத்திய என்ஜினீயர் கைது

Published On 2016-08-09 07:25 GMT   |   Update On 2016-08-09 07:25 GMT
பல்லாவரத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய என்ஜினீயரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை:

கத்தி, அரிவாள் முனையில் காதலுக்கு விடை தேடும் ஒரு புதிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. நாகரீக சமூகத்தில் அரங்கேற்றப்படும் இந்த அநாகரீக செயல்கள் அதிர வைக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்ட சுவாதியின் நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. நெல்லையில் இருந்து வந்த ராம்குமார் ஒரு தலையாய் காதலித்து தொல்லை கொடுத்திருக்கிறான். காதல் நிறைவேறாததால் சுவாதியின் கதையையே முடித்தான்.

அதே பாணியில் ஒரு இளம்பெண்ணை என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு சம்பவங்களும் ஒரே மாதிரிதான். நுங்கம்பாக்கத்தில் நடந்தது அதிகாலை நேரம். பல்லாவரத்தில் நடந்திருப்பது அந்தி மாலையில். அன்று ரெயில் பயணிகள் மத்தியில் நடந்தது. இன்று சந்தையில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் நடந்துள்ளது.

பல்லாவரம் சந்தை ரோட்டில் நேற்று மாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. திடீரென ஒரு இளம்பெண் கையில் ரத்தம் சொட்ட அலறியதையும் அருகில் ஆவேசத்துடன் வாலிபர் ஒருவர் கத்தியுடன் நின்றதையும் பார்த்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஏற்கனவே சுவாதியை வெட்டிக் கொன்ற போது ஒருவர் கூட தடுக்கவோ, காப்பாற்றவோ இல்லை. கொலையாளியை விரட்டி பிடிக்கவோ முன்வரவில்லை என்ற பழிச்சொல் ஆண் வர்க்கத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தி இருந்ததால் அந்த பகுதியில் நின்றவர்கள் வீராவேசத்துடன் துணிச்சலாக சென்று அந்த வாலிபரை மடக்கினார்கள்.

பின்னர் பல்லாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் இதுவும் காதலால் நடத்தப்பட்ட தாக்குதல்தான் என்பது தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபரின் பெயர் கருணாகரன் (23). போரூரில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

கத்தியால் குத்தப்பட்ட பெண் மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பல்லாவரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து மின்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் தூரத்து உறவுமுறை கொண்டவர்கள். அதனால் இளம் வயதிலேயே பழக்கம் ஏற்பட்டது. சின்னவயதில் நட்பாய் தொடர்ந்த பழக்கம் பருவ வயதை எட்டியதும் காதலாய் மலர்ந்தது. கருணாகரனின் மனதுக்கு மதி குடிபுகுந்தார்.

எத்தனை நாள் பொத்தி பொத்தி வைத்தாலும் ஒருநாள் காதல் வெளியே தெரியத்தானே செய்யும்?

அப்படித்தான் மதியின் வீட்டுக்கு தெரிந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கண்டித்தனர். ‘என்ன மதி, உனக்கு மதி கெட்டுபோச்சா? கருணாகரனுக்கும் உனக்கும் உறவுமுறை சரி வராதே! மறந்து விடு அவனை?’ என்று அறிவுறுத்தினார்கள்.

தங்கள் உறவு முறை குறுக்கே வரும் என்று எதிர் பார்க்காததால் அதிர்ந்தார்கள். மதியின் மனதில் ஏகப்பட்ட குழப்பம். முடிவெடுக்க முடியாமல் தவித்த மதி கருணாகரனிடம் இருந்து ஒதுங்க தொடங்கியிருக்கிறார்.

காதல் போதையில் இருந்த கருணாகரனுக்கோ மதியின் பாராமுகம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கு இன்று ஒரு முடிவு கட்டிவிட வேண்டியதுதான் என்று கத்தியுடன் புறப்பட்டிருக்கிறார்.

மதி வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்று காத்திருந்தார். வேலை முடிந்து வெளியே வந்த மதி ஆபீசுக்கு ஏன் வந்தாய்? என்று கண்டித்திருக்கிறார். பின்னர் விடுதிக்கு செல்வதற்காக சந்தை ரோடு வழியாக நடந்து சென்றிருக்கிறார். பின் தொடர்ந்து சென்ற கருணாகரன் மதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ‘உனக்கு வேறு யாருடனோ பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் என்னை வெறுக்கிறாய்’ என்று கோபத்தில் கூறியிருக்கிறார்.

அதை கேட்டதும் ஆவேசம் அடைந்த மதி காலில் கிடந்த செருப்பை கழட்டி கருணாகரனின் கன்னத்தில் அறைந்தார்.

நடுரோட்டில் செருப்படி வாங்கிய கருணாகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதியை குத்தி இருக்கிறார். அதை தடுத்ததால் இடது கையில் கத்தி குத்து விழுந்தது. மீண்டும் குத்த பாய்ந்த போதுதான் பொதுமக்கள் மடக்கி விட்டனர். மதி அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார்.

மதியிடம் போலீசார் விசாரித்தபோது ‘எனக்கு காதலும் இல்லை ஒன்றும் இல்லை. கருணாகரனுடன் நட்பு ரீதியில்தான் பழகினேன். கல்யாணம் செய்து கொண்டதாக அவர் சொல்வது பொய் என்றார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் பல்லாவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News