செய்திகள்

செம்மரக்கடத்தலில் கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது: சந்திரபாபுநாயுடு அறிவிப்பு

Published On 2016-08-09 04:42 GMT   |   Update On 2016-08-09 04:48 GMT
சென்னை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என்று சந்திரபாபுநாயுடு அறிவித்துள்ளார்.
சென்னை :

சித்தூர் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்ட வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

32 தமிழர்கள் மீதும் ஆந்திர மாநில போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான 32 தமிழர்களும் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபுநாயுடுக்கு கோரிக்கை விடுத்தார்.

அது மட்டுமின்றி 32 தமிழர்கள் கைது விவகாரத்தை பாராளுமன்றத்திலும் அ.தி.மு.க. எழுப்பியது. மேலும் 32 தமிழர்களை மீட்பதற்கு உதவும் வகையில் 2 வக்கீல்களையும் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய இயலாது என்று ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குப்பம் வந்திருந்த அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது. கைதான 32 பேரும் அப்பாவிகள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 32 தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களை விடுதலை செய்ய இயலாது. இது பற்றி ஆந்திர அரசு தமிழக அரசுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும்.

செம்மரக் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபுநாயுடு கூறினார்.

Similar News