செய்திகள்

காரிமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதி என்ஜினீயர் பலி

Published On 2016-08-08 05:48 GMT   |   Update On 2016-08-08 05:48 GMT
காரிமங்கலம் அருகே நள்ளிரவில் லாரி மீது வேன் மோதி என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி:

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ஸ்ரீதர்(வயது 26). இவர் பி.இ.பட்டப் படிப்பு முடித்து விட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் துறையில் லேக் டெக்னீ சியனாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊரில் உள்ள உறவினர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மலையனூரில் வீற்றிருக்கும் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அதன் படி நேற்று காலையில் அவர்கள் சுற்றுலா பஸ் மற்றும் வேன், கார் ஆகியவற்றை வாடகைக்கு அமர்த்தி, சாமி கும்பிட மலையனூர் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கோவிலில் பூஜைகள் செய்து, சாமியை கும்பிட்டு விட்டு, இரவில் ஊருக்கு திரும்பினர். அப்போது, வேனில் முன்பக்கம் டிரைவர் இருக்கையின் அருகே உள்ள இருக்கையில் ஸ்ரீதர் அமர்ந்திருந்தார்.

நள்ளிரவு ஒரு மணியளவில் காரிமங்கலம் அருகே உள்ள கெர கோட அள்ளி என்ற இடத்தில் வேன் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்தனர். உடனே டிரைவர் சாலையின் ஓரமாக லாரியை நிறுத்துவதற்காக மெதுவாக சாலையின் ஓரத்திற்கு திருப்பினார்.

அப்போது வேன் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் இடது புறமாக இருந்த ஸ்ரீதர் பலத்த காயம் அடைந்தனர். வேனில் இருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News