நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டராக ஆசியா மரியம் பதவி ஏற்பு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக நாமக்கல் மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக ஆசியா மரியம் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை 8 மணியளவில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
அப்போது அவரிடம் கலெக்டர் தட்சிணாமூர்த்தி நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்து விட்டு விடை பெற்றார். பணி மாறுதலாகி செல்லும் அவருக்கு அரசு அலுவலர்கள் சாலைவை அணிவித்து, வழியனுப்பி வைத்தனர்.
புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் ஆசியா மரியத்துக்கு அரசு அலுவலர்களும், ஊழியர்களும் பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு விரைவாகவும், துரிதமாகவும் கிடைத்திட விரைந்து நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுவேன் என்றார்.
இதற்கு முன் இவர் சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளராக (கல்வி) பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.