கன்னியாகுமரியில் 150 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி- விஜய் வசந்த் எம்.பி. பெருமிதம்
- கன்னியாகுமரிக்கு மேலும் அழகும் பெருமையும் சேர்க்கும் வகையில் இன்று 150 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்கிறது.
- விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்.பி., விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மகாதானபுரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள ரவுண்டனா சந்திப்பில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு, தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
கன்னியாகுமரிக்கு மேலும் அழகும் பெருமையும் சேர்க்கும் வகையில் இன்று 150 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்கிறது. ராஜ்யசபா உறுப்பினர் திரு. விஜயகுமார் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக நிறுவப்பட்ட கொடி கம்பத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் கொடியேற்றினார்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.