1 லட்சத்து 75ஆயிரம் கன அடியாக உள்ளது : ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து நீடிக்கும் நீர்வரத்து
- கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
- உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
பென்னாகரம்,
கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் கர்நாடக மாநில கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 17 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் இந்த இரு அணைகளின் இருந்து 97 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் காவிரி கரையோர பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலி குண்டுலுவுக்கு வந்தது.
இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகே னக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க வும் மாவட்ட நிர்வாகம் இன்று 28-வது நாளாக தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல்லில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளாக ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அங்கு வசித்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அங்கு வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.