செய்திகள்
வாக்கு சேகரிப்புக்கு இடையே தொழுகையில் ஈடுபட்ட அமைச்சர் பாண்டியராஜனை படத்தில் காணலாம்.

திருவேற்காடு பள்ளிவாசலில் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பு

Published On 2021-03-19 00:11 GMT   |   Update On 2021-03-19 00:11 GMT
திருவேற்காடு பள்ளிவாசலில் ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுவதையொட்டி, ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான பாண்டியராஜன் அந்த தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பள்ளிவாசலில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் அவர், ஆவடி தொகுதியில் உள்ள மாறன் மாளிகை அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது தலைமை தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். ஏற்கனவே இந்த தொகுதியில் 2 பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது 3-வதாக இந்த பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஆவடி தொகுதி அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 50 பேர் அக்கட்சியின் திருவேற்காடு வர்த்தக பிரிவு மாவட்டசெயலாளர் ஆனந்த் தலைமையில் அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திருவேற்காட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற அவர், தொழுகைக்கு வந்த இஸ்லாமிய மக்களிடம் தனக்கு ஆதரவு அளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.கவை அமோக வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களிடம் வாக்கு சேகரித்தபோது ஜெயலலிதா ஆட்சியிலும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும், இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

மேலும், கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆவடி தொகுதி வளர்ச்சிக்காக அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீத மக்கள் நலப் பணிகளும், அரசு திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபைத்தேர்தலையொட்டி, ஆவடி தொகுதி வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையை அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட இருக்கிறார்.
Tags:    

Similar News