செய்திகள்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி குறும்படங்களை திரையிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி குறும்படங்களை திரையிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில் தேர்தல் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்து 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எய்திடும் வகையில், வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 100 சதவீத வாக்குப்பதிவு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், இளவயது வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாக்காளர்களையும் ஊக்குவித்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம், நேர்மையாக ஜனநாயக கடமையை ஆற்றுவோம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
அதன்படி ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் திரையிடப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்வின் போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், தாசில்தார்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.