செய்திகள்

போயஸ் கார்டன் வீடு எங்களுக்கே சொந்தம்: ஜெ.தீபா அறிக்கை

Published On 2017-05-26 05:00 GMT   |   Update On 2017-05-26 05:00 GMT
என் அத்தைக்கு சொந்தமான, அனைத்து பூர்வீக சொத்துக்களை முறைப்படி பராமரிக்கும் உரிமை எனக்கும், சகோதரர் தீபக்குக்கும் மட்டும் உள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா கூறி உள்ளார்.
சென்னை:

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சித் தலைவி வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை திடீர் ஞானோதயமாக நினைவு இல்லமாக மாற்றப் போவதாக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தொண்டர்களை ஏமாற்ற அரசு செய்த போலி ஏமாற்று நாடகமாகும்.



அம்மாவின் மறைவிற்குப் பின்னால் சசிகலா கூட்டத்தினரின் ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ள சூழ்நிலையில் மக்கள் மத்தியில் மரியாதை இழந்தவர்கள் செல்வாக்கை மீண்டும் பெற முடியாதா? என்ற நப்பாசையில் அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் செய்த பொய் வேடமே நினைவு இல்ல நாடகமாகும்.

அம்மாவின் சமாதியை இதுவரை கட்ட முயற்சி செய்யாதவர்கள் அம்மா மறைந்து 6 மாதம் ஆகியும் தலைமைக் கழகத்தின் சார்பில் படத்திறப்பு நிகழ்ச்சி கூட நடத்த முன்வராதவர்கள் நினைவு இல்லம் பற்றி தீர்மானம் நிறைவேற்ற என்ன யோக்கியதை இருக்கிறது?

இன்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள் எத்தனை இடங்களில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். அம்மாவுக்கு சிலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்?

அம்மாவின் சமாதியை, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் இருக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூவியபோதும் அரசு அலுவலகங்களில் அம்மாவின் படம் இருக்க கூடாது என்று எதிரிகள் கூக்குரலிட்ட போதும் அவர்களை எதிர்த்து பேசாமல் மவுனச்சாமியார்களாக இருந்த அமைச்சரவை கூட்டம் தீர்மானத்தை தொண்டர்களும், நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனது பாட்டி காலத்தில் நாங்கள் அத்தையுடன் ஓடி விளையாடிய எங்கள் பூர்வீக இல்லத்தை இடையிலே சதிகாரர்களால் பிரித்து வைக்கப்பட்டோம்.

தற்போது ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இரு அணிகளின் போலி வேடதாரிகளை அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அடையாளம் கண்டு எனது தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் செயல்பட்டு வருவதை சகிக்க முடியாத கூட்டம் என் வளர்ச்சியைத் தடுப்பதற்காக நினைவு இல்ல நாடகத்தை அரங்கேற்ற எத்தனிக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அம்மா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறேன். தற்போது மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டம் என் அத்தையை வஞ்சித்த கூட்டம், வஞ்சகர்கள் கூட்டம். ஊழல் கறைபடிந்த கூட்டம், நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க தீய திட்டம் தீட்டியுள்ளார்கள்.

அம்மாவின் ரத்த வாரிசான என்னை பழி வாங்கும் நோக்கத்தோடு என் அத்தையிடமிருந்து எல்லாவற்றையும் அபகரித்தவர்கள் என்னிடம் இருந்து என் தாயை போன்ற அத்தையை அபகரித்தவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த தியாகத் தலைவியை மக்களால் காண முடியாமல் செய்தவர்கள் இன்று இல்லத்தைக் காட்டி அனுதாபம் தேடி தங்களுடைய தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள்.

அத்தைக்காக நான் அவர்கள் வழியில் மக்களுக்காக பணியாற்றுவேன். நானும் என் சகோதரர் தீபக்கும் மட்டும் தான் அனைத்து சொத்துக்களுக்கும் முறையான சட்டப்பூர்வமான வாரிசு. எங்களிடம் முறையாகவோ சட்டரீதியாகவோ அனுமதி பெறாமல் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது சட்டரீதியான மற்றும் தார்மீக ரீதியான முறைகேடாகும்.



என் அத்தைக்கு சொந்தமான, அனைத்து பூர்வீக சொத்துக்கள் அதனை முறைப்படி பராமரிக்கும் உரிமை முழுமையாக எனக்கும், சகோதரர் தீபக்குக்கும் மட்டும் உள்ளது.

பிறகு வரும் காலங்களில் முறையாக அ.தி.மு.க.வின் கோட்டையாக அந்த புனித இல்லத்தை கட்டி காப்பது எனது கடமையாகும். தற்போது உள்ள அமைச்சரவைக்கு இந்த நடவடிக்கை எடுக்கும் உரிமை எந்த அடிப்படையில் உள்ளது.

அம்மாவுக்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் கடமையை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சதியினை முறியடிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் உடனடியாக குரல் எழுப்ப வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் எங்களுக்கு சொந்தமான தார்மீக உரிமைகளை பறிக்க நினைப்பதை அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அம்மாவிற்கு துரோகம் இழைக்காதீர்கள். அம்மா இந்த வழக்கில் இருந்து முழுமையாக அவர் இறந்த பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனால் 100 கோடி அபராதம் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 கோடி முறைகேடான சொத்து குவிப்பு வழக்கு பட்டியலில் போயஸ் தோட்ட இல்லம் இடம் பெறவில்லை.

இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.
Tags:    

Similar News